எந்த நேரத்திலும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வருமென்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுவதும் மோசமாகவுள்ள ரோடுகள், அவசர கதியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் தரம் கேள்விக்குரியதாக உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தல் தேதி, மிக விரைவில் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் விரைவுபடுத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பெரும்பாலான ரோடுகள் மோசமாக இருப்பதால், பொது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதே நிலையில், மக்களிடம் ஓட்டுக் கேட்டுப் போனால், எதிர்ப்பு அதிகமாயிருக்கும்.அதனால், நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான ரோடுகளைச் சீரமைக்குமாறு, அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. உத்தரவுடன், நீண்ட காலமாக ஒதுக்கப்படாமலிருந்த நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. உதாரணமாக, கோவை மாநகராட்சியில், மோசமாகவுள்ள ரோடுகளைச் சீரமைக்கரூ.100 கோடி நிதி, சமீபத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோல, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகளுக்கு, தனித்தனியாகவும், நெடுஞ்சாலைத்துறை ரோடுகளைச் சீரமைக்க மொத்தமாகவும் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், ரோடு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், இந்த நிதியைக் கொண்டு, விரைவாக டெண்டர் விட்டு பணிகளைத் துவக்கவும் அறிவுறுத்தியுள்ளது.இதன் காரணமாக, அவசர அவசரமாக டெண்டர் விட்டு, ரோடு சீரமைப்புப் பணிகள் வேகவேகமாக நடந்து வருகின்றன. பல இடங்களில் இரவோடு இரவாக, ரோடுகள் சீரமைக்கப்படுகின்றன. மில்லிங் விதி கில்லிங்
ரோடு சீரமைப்புப் பணி மேற்கொள்ளும்போது, 'மில்லிங்' செய்த பின்பே, ரோட்டைப் புதுப்பிக்க வேண்டுமென்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சீரமைப்புப் பணியின்போது, ரோட்டின் மீது ரோடு போடுவதால், உயரம் அதிகமாகி, வீடுகள் மற்றும் கடைகள் தாழ்வாகி விடுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ரோடுகளைச் சீரமைக்கும்போது, கடைபிடிக்க வேண்டிய பல விதிமுறைகளை அரசு வகுத்துக் கொடுத்துள்ளது.ரோட்டுக்கான நீளம் சார்ந்த 'எல்.எஸ்.' (LS-Longitudinal Section) வரைபடம் தயாரித்து, ரோட்டின் சராசரி உயரத்தை (FRL- Finished road level) கணக்கிட்டே, ரோடு சீரமைப்புக்கான மதிப்பீட்டைத் தயாரிக்க வேண்டுமென்று, துறை இன்ஜினியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்புக்கு முன்னும் பின்னும் ரோடு ஒரே உயரத்தில் இருக்கும் வகையில், பணி மேற்கொள்ள வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, ரோடுகளைச் சீரமைக்கும் நோக்குடன், வேகவேகமாக பணிகள் நடப்பது, அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. அரசின் அறிவுறுத்தல் மற்றும் ஐகோர்ட் உத்தரவை மீறி, அவசர கதியில் ரோடுகள் சீரமைக்கப்படுவதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், தரமாக ரோடு போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.-நமது சிறப்பு நிருபர்-