| ADDED : டிச 04, 2025 06:38 AM
வால்பாறை: வால்பாறை நகராட்சி சார்பில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளன. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரை சமீப காலமாக அரசியல் கட்சியினர் விளம்பர போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தியுள்ளனர். நகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். பயணியர் கூறியதாவது: வால்பாறை நகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் விதிமுறையை மீறி விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், ஸ்டேன்மோர் சந்திப்பு, புதுத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பயணியர் நிழற்கூரையில் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தியுள்ளனர். நகராட்சி அதிகாரிகள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் அப்புறப்படுத்தி, பயணியர் நிழற்கூரையை துாய்மையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.