உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுமக்கள் பிரச்னைகள் எதுவும் தீரக்காணோம்; குறைதீர் கூட்டத்தில் வாராவாரம் மனுக்கள் ஆரவாரம்

பொதுமக்கள் பிரச்னைகள் எதுவும் தீரக்காணோம்; குறைதீர் கூட்டத்தில் வாராவாரம் மனுக்கள் ஆரவாரம்

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும், மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, குறைகளை தீர்த்து வைக்க வேண்டியது, துறை சார்ந்த அதிகாரிகளின் கடமை. ஆனால் நடவடிக்கை தாமதமாவதால், மக்களிடமிருந்து மனுக்கள் குவிந்து வருவது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்ப்புக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.உரிய நடவடிக்கை எடுக்க, அம்மனுக்கள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஒவ்வொரு மனுவையும் பரிசீலித்து, நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.ஒவ்வொரு வாரமும் இதுதான் நடக்கிறது. பிரச்னைகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தது மாதிரி தெரியவில்லை. தீராத பிரச்னைகள் அடங்கிய கனத்த பைல்களுடன், பொதுமக்களும் வாரா வாரம் தவறாமல், மனு அளிக்க வந்து விடுகின்றனர்.

வீடு, பட்டா கேட்டு மனுக்கள்

வீட்டுமனை பட்டா, இலவச வீடு கேட்டு வரும் மனுக்களுக்கும் குறைவில்லை. நேற்று மட்டும் இலவச வீடு கேட்டு, 205 மனுக்களும், வீட்டுமனை பட்டா கேட்டு, 186 மனுக்களும், வேலை வாய்ப்பு கேட்டு 7 மனுக்களும், இதர மனுக்கள் 196 என்று மொத்தம் 588 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இப்படி வாராவாரம் மனுக்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவது, செயல்பாடற்ற அரசு நிர்வாகத்தின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது.

விடாமல் படை எடுப்பவர்கள் இதோ சில உதாரணங்கள்

n கிணத்துக்கடவு, வலசுபாளையம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சஜீனா, மூன்று ஆண்டுகளாக பட்டா, சிட்டாகேட்டு தொடர்ந்து மனுக்களை சமர்ப்பித்துவருகிறார். வருவாய்த்துறை அதிகாரிகள் இவரது மனுக்களை தொடர்ந்து நிராகரித்து வருவதாக கூறுகிறார்.n கோவைப்புதுார் அறிவொளி நகரை அடுத்து உள்ளது, மலைநகர் மற்றும் அண்ணாநகர். இங்கு மொத்தம் 37 பிளாக்குகளில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் குடிநீர் மற்றும் போர்வெல் நீர், சரியான நேரத்துக்கு வினியோகிப்பதில்லை. குப்பை அகற்றப்படுவதில்லை. மருத்துவம், சுகாதாரம் இங்கு கேள்விக்குறியாகவே உள்ளதாக, இங்கு குடியிருப்போர் மனு அளிக்க வருகின்றனர்.n காட்டம்பட்டி வடசித்தூர் ஜல்லிப்பட்டி செஞ்சேரிமலை வார சந்தை இடத்தை சிலர் ஒப்பந்தம் எடுத்து, வாரச்சந்தை ஏலம் எடுத்து சுங்கம் வசூலிக்கின்றனர். ஆனால் ரசீது வழங்குவதில்லை. சந்தையில் மின்விளக்கு வசதி இல்லை. ஆனால் வியாபாரிகளிடம், 700 முதல் 1,400 ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும், மனு அளிக்கின்றனர்.

'விரைவில் முடிவுக்கு வரும்'

இது குறித்து, கலெக்டர் பவன்குமார் கூறியதாவது:ஒரே கோரிக்கையை ஒரே நபர், திரும்ப திரும்ப கொடுப்பது உண்மை. அது அடுக்குமாடி குடியிருப்பு வேண்டியும், வீட்டுமனைப்பட்டா கேட்டும் வரும் மனுக்களின் எண்ணிக்கை அதிகம்.அதை சரிசெய்ய மனுதாரரின் முகவரிக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியிருக்கிறேன். மனுவின் மீது களஆய்வு செய்யாமல் வீடோ, வீட்டுமனையிடமோ வழங்க முடியாது. அதனால் தான் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்குள் மனுதாரர்கள் மீண்டும் மனு சமர்ப்பிக்கின்றனர்.இப்பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும். வேலைவாய்ப்பு கேட்டு வருவோருக்கு வேலைவாய்ப்பு மேளா நடத்தப்படுகிறது. அதன் வாயிலாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வரும் மனுக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இது போன்று அதிக எண்ணிக்கையில் வரும் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி