| ADDED : ஆக 02, 2025 11:47 PM
கோவை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்படி, தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை மதிப்பீடுகளின்படி, மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கவும், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ், ஆங்கில வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாகப் பெற பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக, மாணவர்களுக்குப் பயிற்சிப் புத்தகங்களும், ஆசிரியர்களுக்குக் கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கல்விசார் செயல்பாடுகளை சார்நிலை அலுவலர்கள்ஆய்வு செய்ய வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றார்களா, அந்தப் பயிற்சியில் கற்ற வழி முறைகளை வகுப்பறையில் பயன்படுத்துகிறார் களா, அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பு அலுவலர்கள் கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அலுவலர்கள் நேரடியாக மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை சோதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.