ஒரே பாரதம் உன்னத பாரதம் தேச ஒருமைப்பாடு முகாம்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மக்கள் தொடர்பு அலுவலகத்துடன் இணைந்து, 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற விழிப்புணர்வு முகாம் நடத்தியது. நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசுகையில், ''தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்காக மத்திய அரசாங்கத்தால் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மொழி, இலக்கியம், பண்பாடு, சுற்றுலா, விவசாயம், வர்த்தகம் மற்றும் இதர துறைகளிலும் முன்னேற்றம் அடைய இத்திட்டம் பெரும் உதவிகரமாக அமையும். இத்திட்டமானது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களை ஒருங்கிணைக்க செய்யும் உன்னத திட்டமாகும்,'' என்றார். முகாமையொட்டி, இயற்கையை பாதுகாக்கும் வகையில் ஒரு மரக்கன்று நடும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. பேச்சுப் போட்டி, கவிதை, பாட்டு போட்டி, வினாடி வினா நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. முகாமில், ரோட்டரி சங்க சமுதாய குழுவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மையத்தின் இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.