| ADDED : டிச 10, 2025 07:57 AM
கோவை: மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் புகைப்படங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கம் வெல்லும் மாணவர்கள், அவர்கள் பெற்ற பரிசுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து, பள்ளியின் முக்கிய அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூறுகையில், 'ஒரு மாணவனின் வெற்றி என்பது, அவனோடு நின்றுவிடாமல், சக மாணவர்களுக்கும் ஊக்கமளிப்பதாகமாற வேண்டும். வெற்றியாளர்களின் புகைப்படங்களை தினமும் பள்ளியில் பார்க்கும்போது, மற்ற மாணவர்களுக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எழும். இது ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்க, வாய்ப்பாக அமையும்' என்றனர்.