சத்குரு தொடர்பான போலி வீடியோ ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு
தொண்டாமுத்துார் : ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடர்பாக, பரப்பப்படும் போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க, புதுடில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு, உலக அளவில் இருக்கும் செல்வாக்கை கருத்தில் கொண்டு, அவரது பெயர், உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் போலியாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட செய்திகள், வீடியோ உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.இதுதொடர்பாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சைபர் போலீசார் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களிடம், ஈஷா அறக்கட்டளை புகார் அளித்தது.சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு, புதுடில்லி உயர்நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, சத்குரு பெயர், உருவம் மற்றும் ஆளுமையை தவறாக பயன்படுத்தும் பதிவுகளை, ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.இதுதொடர்பாக, ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சத்குருவின் தனி உரிமைகளுக்கு புதுடில்லி உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலியாக வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் நிதி முதலீடுகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்கள் மோசடியானவை. ஈஷா அறக்கட்டளை இத்தகைய போலியான பதிவுகளை அகற்றவும், மக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்கவும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது' என கூறியுள்ளது.