உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெற்றோர் சண்டை போடுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் உளவியல் நிபுணர்

பெற்றோர் சண்டை போடுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் உளவியல் நிபுணர்

கோவை; பள்ளி குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்து வருவதற்கு, பெற்றோரும் முக்கிய காரணம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தாய்க்கும் தந்தைக்கும் உள்ள உறவுதான் ஒரு குடும்பத்தின் அடித்தளம். பெற்றோர் இடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம், முரண்பாடுகள் அல்லது பிரிவுகள் குழந்தைகளின் மனம், உடல் மற்றும் சமூக வாழ்க்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து, உளவியல் ஆலோசகர் பாலமுருகன் கூறியதாவது: பெற்றோர் இடையே ஏற்படும் தகராறுகளை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்கள் மனதில் பாதுகாப்பின்மை, அச்சம், தாழ்வு மனப்பான்மை உருவாகும். பெற்றோரின் பிரச்னைகளுக்கு நாம்தான் காரணம் என்ற தவறான குற்ற உணர்வும் உருவாகும். இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் ஏற்படுகிறது. வளரும் பருவத்தில் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டால், எதிர்கால உறவுகள் மீதான நம்பிக்கையையும் அது பாதிக்கும். அந்த குழந்தைகளால், நண்பர்களுடன் இயல்பாக பழக முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம் வரும். இதனால் மற்றவர்கள் விலகி சென்று, அக்குழந்தைகள் தனிமைப்படும். அவர்கள் மனதில் சமூக அச்சம் அதிகரிக்கும். இந்த பாதிப்புகள் கல்வியிலும் நிச்சயமாக எதிரொலிக்கும். பள்ளியில் செயல்திறன் குறைதல், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் உறவு பிரச்னைகள் போன்றவையும் உருவாகும். மனஅழுத்தம் நீடித்தால், குழந்தைகளின் உடல் நலனும் பாதிக்கும். சரியாக தூங்க மாட்டார்கள். எந்த உணவின் மீதும் நீடித்த விருப்பம் இருக்காது. நேற்றுவரை ருசித்து சாப்பிட்ட உணவை, இன்று அடியோடு வெறுப்பதாக கூறும் மாற்றம் உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி போன்ற மிதமான உடல் நலக்குறைவுகள் தவிர காலப்போக்கில் குழந்தையின் மூளை வளர்ச்சியையும் இந்த மன அழுத்தம் பாதிக்கும். அதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் கற்றல் திறன் வெகுவாக குறைந்து, எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும் அபாயம் இருக்கிறது. பெற்றோர் இதை உணர்ந்து நடக்க வேண்டும். பெற்றோர் இடையே ஏற்படும் தகராறுகளை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்கள் மனதில் பாதுகாப்பின்மை, அச்சம், தாழ்வு மனப்பான்மை உருவாகும். பெற்றோரின் பிரச்னைகளுக்கு நாம்தான் காரணம் என்ற தவறான குற்ற உணர்வும் உருவாகும். இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் ஏற்படுகிறது. வளரும் பருவத்தில் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டால், எதிர்கால உறவுகள் மீதான நம்பிக்கையையும் அது பாதிக்கும். நண்பர்களுடன் இயல்பாக பழக முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம் வரும். அக்குழந்தைகள் தனிமைப்படும். அவர்கள் மனதில் சமூக அச்சம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை