போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
வால்பாறை; வால்பாறை நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டோரத்தில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது. சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வரும் போது, மேலும் நெரிசல் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் தயக்கம் காட்டுவதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.சுற்றுலா வாகனங்கள் நிறுத்த தனி 'பார்க்கிங்' வசதி இல்லாததால், அவர்களும் ரோட்டோரத்திலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது.மக்கள் கூறியதாவது:ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதாலும், ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, நிம்மதியாக ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் நிறுத்த வேண்டும். நகராட்சி சார்பில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புக்கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும்.இவ்வாறு, கூறினர்.