| ADDED : ஜன 02, 2024 11:02 PM
கோவில்பாளையம்;கீரணத்தம் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால், கடும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.கீரணத்தம் கிழக்குப் பகுதியில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை தொழிலாளர்கள் உள்பட 1240 குடும்பங்கள் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. மலை போல் தேங்கியுள்ளன.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு எம்.ஜி.ஆர்., நகர், குறிஞ்சி நகர், ராம் பட்டினம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 1,500 குடும்பங்கள் வசிக்கின்றன. கோவை--சத்தி சாலையில், காபிக் கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து கீரணத்தம் செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் குப்பை, மலை போல் குவிந்து கிடக்கிறது. மழை வரும் போது குப்பைகள் குடியிருப்புகளுக்குள் செல்கிறது. வேகமாக காற்று வீசும் போதும் குப்பைகள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சுகாதார கேடு ஏற்படுத்துகிறது. குப்பைகளை முறையாக தரம் பிரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரிப்பதில்லை.வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்குவதில்லை. ஏற்கனவே டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.தற்போது மலை போல் குவிந்திருக்கும் குப்பையால் காய்ச்சல் பரவுவது அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.இதுகுறித்து கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை தலைவர் இளங்கோவன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.