உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவிநாசி சாலையில் செல்வோர் மண்ட பத்திரம்! பாலம் கட்டுமானத்தில் பகீர்; கல் விழுந்து சேதமானது கார்

அவிநாசி சாலையில் செல்வோர் மண்ட பத்திரம்! பாலம் கட்டுமானத்தில் பகீர்; கல் விழுந்து சேதமானது கார்

கோவை : கோவை - அவிநாசி ரோட்டில், மேம்பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் அலட்சியத்தால், மேலிருந்து கான்கிரீட் கல் பெயர்ந்து, ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்ததில், 'பேனட்' மற்றும் கண்ணாடி நொறுங்கியது. இச்சம்பவம் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஏறு தளம், இறங்கு தளங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.ஹோப்ஸ் காலேஜ் பகுதியில், பக்கவாட்டுச் சுவர் கட்டுவதற்கு கான்கிரீட் கலவை ஊற்றுவதற்கான ஏற்பாடுகளை, கட்டுமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் செய்தனர். அதற்காக, மேம்பாலத்தின் மேற்பகுதியை தயார் செய்து கொண்டிருந்தபோது, மேலிருந்து கான்கிரீட் கல் பெயர்ந்தது.அவ்வழியாக வந்த, டி.என். 38 டிஎச் 4700 என்ற பதிவெண் கொண்ட கார் மீது கல் விழுந்தது. மேலிருந்து விழுந்த வேகத்தில், கார் 'பேனட்' பகுதி சேதமடைந்து, கண்ணாடி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டுமான தொழிலாளர்களின் அஜாக்கிரதையால், இச்சம்பவம் நடந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் இது, அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், சில நாட்களுக்கு முன், உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலத்தில் கரும்புக்கடை சாரமேடு பகுதியில், மேம்பாலத்தின் மேற்பரப்பில் இருந்து கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதுவும், வாகன ஓட்டிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனியிடம் கேட்டதற்கு, ''கான்கிரீட் கல் விழுந்த இடத்தில் ஆய்வு செய்தோம். பிரிகாஸ்ட் முறையில் மேம்பாலம் கட்டப்படுகிறது. ''மையத்தடுப்பு மற்றும் பக்கவாட்டு தடுப்புச்சுவர் கான்கிரீட் போடப்படும். அப்பணியின்போது கான்கிரீட் கலவை கொட்டிக் கிடக்கும். கான்கிரீட் பாக்ஸ் இணைப்பு பகுதியில் ஒரு கல் இருந்திருக்கிறது. இடைவெளி வழியாக கார் மீது கல் விழுந்திருக்கிறது. ''பாதிக்கப்பட்ட காரை, ஒப்பந்த நிறுவனத்தினர் சரி செய்து கொடுப்பர். ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என்றார்.

'தடுப்பு வலை கட்டவில்லை'

மாநில நெடுஞ்சாலைத்துறை (சாலை பாதுகாப்பு) கோட்ட பொறியாளர் மனுநீதியிடம் கேட்டபோது, 'துாண் அமைந்துள்ள பகுதியில் கான்கிரீட் பாக்ஸ் வைக்கும்போது, ஒரு அடிக்கு மேல் இடைவெளி இருக்கும். தார் ரோடு போடும் சமயத்தில் அவை சரி செய்யப்படும். இடைப்பட்ட காலத்தில், தற்காலிகமாக இரும்பு தகடு பொருத்துகின்றனர். மீதமான கான்கிரீட் கலவை கல் இடைவெளியில் மேலிருந்து கீழே விழுந்திருக்கிறது. இடைவெளி இல்லாமல் 'பிளேட்' வைத்து அடைத்திருக்க வேண்டும்; வலையும் கட்ட வேண்டும். அதை மீறி விபத்து நடந்திருக்கிறது,'' என்றார்.

'பேரதிர்ச்சி அடைந்தோம்'

மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் கல் விழுந்த காரில், இருவர் பயணித்தனர். பெயர் வெளியிட விரும்பாத அவர்கள் கூறுகையில், 'கல்லுாரியில் பகுதிநேர படிப்பு படிக்கிறோம். காந்திபுரத்தில் இருந்து சி.ஐ.டி., கல்லுாரிக்குச் சென்றோம். 2ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 11:45 மணியளவில் ஹோப்ஸ் காலேஜ் பகுதியை கடந்தபோது, மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து, திடீரென கல் விழுந்தது; அதைப்பார்த்து பேரதிர்ச்சி அடைந்தோம்.நல்லவேளையாக எங்கள் இருவருக்கும், எவ்வித காயமும் ஏற்படவில்லை. போக்குவரத்து நெருக்கடியாக இருந்ததால், வாகனங்கள் மெதுவாக சென்றன. இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. காரை சரி செய்து தருவதாக, நெடுஞ்சாலைத்துறையினர் கூறியுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Thangaraj
டிச 05, 2024 20:56

நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை...புது கார் தரச் சொல்லுங்க


Thangaraj
டிச 05, 2024 20:51

நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை...புதிய கார் வாங்கித் தர வேண்டும்


VENKATASUBRAMANIAN
டிச 05, 2024 07:41

அதிகாரிகள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது இல்லை. இப்படி ஒன்று இருப்பது தெரியுமா என்பதே சந்தேகமாக உள்ளது. இதுதான் இன்றைய அதிகாரிகளின் லட்சணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை