அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமைக்கணும்
மடத்துக்குளம், ;மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக, மதுரை, திண்டுக்கல் மற்றும் தென்மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், இப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. ஆனால், இந்த பாலத்தில் மின்விளக்குகள், பிரதிபலிப்பான்களும் அமைக்கப்படவில்லை. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, அமராவதி ஆற்றுப்பாலத்தில், இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.