| ADDED : டிச 10, 2025 06:28 AM
கோவை: கோவை மாவட்டம், உக்கடம், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் உபகோவிலாக வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தில், நான்கு குடியிருப்புகள் மற்றும் 18 வணிக கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற, கோவை மண்டல இணை கமிஷனர், 2015ல் உத்தரவிட்டார். அறநிலையத்துறை கமிஷனர், துறை செயலர் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பாளர்கள் செய்த மேல் முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆக்கிரமிப்பாளர் சரவணமூர்த்தி உள்ளிட்ட சிலர், 2018ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது. தொடர்ந்து, கோவிலுக்கு சொந்தமான, 80 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து நேற்று முன்தினம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு, 100 கோடி ரூபாய்.