ஆறு மாதமாக சம்பளம் வரலே துப்புரவு பணியாளர்கள் சோகம்
அன்னுார் : அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வராததால் சோகத்தில் உள்ளனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 76 துவக்க, 15 நடுநிலைப் பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பகுதி நேர தூய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர்.இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.இதுகுறித்து கல்வி குழு உறுப்பினர்கள் கூறுகையில், அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளருக்கு 1,000 ரூபாய் முதல் 1,250 ரூபாய் என மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. அந்த சம்பளமும் கடந்த ஆறு மாதமாக வழங்கப்படவில்லை.கழிப்பறை தூய்மை பொருட்கள் வாங்க தலா 500 முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும். அந்தத் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. சில பள்ளிகளில் பள்ளி தலைமையாசிரியர் தங்கள் சொந்த சம்பளத்தில் இருந்து துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளனர்.பல பள்ளிகளில் சம்பளம் இல்லாமல் துப்புரவு பணியாளர் பணிபுரிந்து வருகின்றனர். அரசு விரைவில் துப்புரவு பணியாளர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்றனர்.