கோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிக்காக தேர்வு
கோவை: நாட்டின், 75 ரயில்வே ஸ்டேஷன்களில் நிரந்தர பயணிகள் தங்குமிடங்களை கட்ட, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நடவடிக்கை, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதையும், பண்டிகை காலங்களில், ஏற்படும் நெரிசலை சமாளிக்கவும் உதவுகிறது. மூத்த ரயில்வே அலுவலர் ஒருவர் கூறியதாவது: கும்பமேளாவின் போது, டில்லி ரயில்வே ஸ்டேஷனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெற்கு ரயில்வேயில், அதிக வருவாய் ஈட்டித் தரும் கோவை ரயில்வே ஸ்டேஷன், மேம்பாட்டு பணிகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 2026க்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனின் நிலைமைக்கு ஏற்ப, நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். மருத்துவ மையம், கழிப்பறை வசதிகள், போதுமான இருக்கைகள், கவுன்டர்கள், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிகள், விசாரணை மையங்கள், குடிநீர், டிஜிட்டல் ரயில் தகவல் பலகைகள் இடம் பெறும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.