கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை
கோவை : கோவை மாவட்டத்தில் பல்வேறு கோர்ட்களுக்கு, மே முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு, மே, 1 முதல், 31 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு கோர்ட்கள் மே 31 வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், 6 சார்பு நீதிமன்றங்கள் மற்றும் 6 முன்சிப் கோர்ட்களில், விசாரணை நடைபெறாது. சி.ஜே.எம் கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட்கள், சிறப்பு கோர்ட்கள், விரைவு கோர்ட்கள் வழக்கம் போல செயல்படும். அதே போல, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களிலுள்ள, மாஜிஸ்திரேட் கோர்ட்கள் வழக்கம் போல செயல்படும்.மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஜாமின், முன்ஜாமின் மனுக்கள் மற்றும் அவசர வழக்குகளை விசாரிக்கவும், அவசர சிவில் வழக்கை விசாரிக்கவும், கோடை கால கோர்ட் செயல்படும். கோடை கால கோர்ட்டில் (கிரிமினல்) விசாரணை நடத்த, கோவை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஜான்மினோ, சிவில் வழக்குகளுக்கு, கோவை முதன்மை சார்பு நீதிபதி கலைவாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.