வெளியூர் செல்லும் பயணியர் தவிப்பு
வால்பாறை; வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவை, பொள்ளாச்சி, பழநி, மன்னார்க்காடு, சேலம், திருப்பூர் மற்றும் எஸ்டேட் வழித்தடங்களில், 42 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், கோடை விடுமுறை என்பதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வரத்துவங்கியுள்ளனர். அதனால், வால்பாறையிலிருந்து வெளியூர் செல்லும் பயணியர் கூட்டம் நேற்று காலையிலேயே அதிகமாக காணப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் பயணியர் பல மணி நேரம் காத்திருந்து, பஸ்களில் பயணம் செய்தனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு, 20 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது. பயணியர் வசதிக்காக மதுரை, திருச்சிக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிம்மதியாக பயணம் செய்யும் வகையில், வெளியூர்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன,' என்றனர்.