கோவிலுக்கு செல்ல வழியில்லை வாகனம் நிறுத்துவதால் இடையூறு
வால்பாறை: வால்பாறையில், கோவில் நுழைவுவாயிலில் வாகனங்கள் நிறுத்தப்பவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகரின் மத்தியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழா, தைப்பூசத்திருவிழா, சூரஹம்சாரம், முருகபக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா, ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா உள்ளிட்டவை ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விழா காலங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபடுகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக கோவிலின் பிரதான நுழைவுவாயிலில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தபடுகின்றன. இதனால், கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கூறியதாவது: சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணியரும் அதிகளவில் செல்கின்றனர். இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள கோவில் பிரதான நுழைவுவாயிலில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, 'நோ பார்க்கிங்' அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் செல்வதற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.