கோவையில் கல்லுாரி மாணவியை நள்ளிரவில், மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், தேசத்தையே உலுக்கியிருக்கிறது. சென்னை அண்ணா பல்கலையில் நடந்த கொடூரத்துக்கு பின், அனைவரது பார்வையும் இப்போது கோவை பக்கம் திரும்பியுள்ளது. கோவை நகரிலும், புறநகரிலும் கல்லுாரிகள் அதிகமாக இருக்கின்றன. வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் வந்து படிக்கின்றனர். மாணவர்கள் அனைவருக்கும் தங்குவதற்கான வசதியை, கல்லுாரி நிர்வாகங்களால் செய்து கொடுக்க முடிவதில்லை. அதனால், அருகாமையில் உள்ள தனியார் விடுதிகள், மேன்ஷன்கள் அல்லது வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். இவ்வாறு தனியார் விடுதிகளில் தங்கியிருப்போருக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்தால், சில நேரங்களில் எல்லையை மீறி விடுகின்றனர். நேர கட்டுப்பாடு தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவிருக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டியது அவசியம். அவர்களை பொறுப்பாளர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் மாணவியர் விடுதிக்கு வந்து சேரவில்லை எனில், அவர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் அல்லது அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஓரிரு முறை இதுபோன்ற விசாரணை நடந்தால், அடுத்தடுத்த நாட்களில் நேரத்தை கடந்து மாணவியர் திரும்பி வருவதுஒழியும். பெற்றோர் கவனம் பெற்றோரும் குறிப்பிட்ட நேர இடைவெளியில், அவர்களுடன் வீடியோ அழைப்பில் பேசுவது உகந்ததாக இருக்கும். அவ்வாறு பேசும்போது, மகனோ, மகளோ கல்லுாரியில் இருக்கிறார்களா, விடுதியில் இருக்கிறார்களா அல்லது வெளியிடங்களில் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த முடியும். கல்லுாரியிலோ, விடுதியிலோ இல்லாத பட்சத்தில், யாருடைய அனுமதி பெற்று வெளியே சென்றனர் என்பதையும், பெற்றோர் அறிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு கேள்விக்குறி இரவு 11 மணிக்கு மேல் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்திருக்கிறது. மாணவியின் நண்பர் மயக்கம் தெளிந்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த பிறகே, அவ்விடத்துக்கு போலீசார் சென்றிருக்கின்றனர். அந்தளவுக்கு இரவு ரோந்து படு 'வீக்'காக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில நாட்களுக்கு முன், துணை ஜனாதிபதி சென்ற வழித்தடத்தில், பலத்த பாதுகாப்பை மீறி, அத்துமீறி இரண்டு பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அப்போதும் போலீசாரின் செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளானது. ரோந்து இல்லையா? விமான நிலையத்துக்கு பின்புறம் அசம்பாவிதம் நடந்திருக்கிறது. விமான நிலையம் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. 24 மணி நேரமும் போலீசார் 'அலர்ட்'டாக இருக்க வேண்டும்; இருந்திருக்க வேண்டும். சுற்று வட்டார பகுதிகளுக்கும், தினமும் ரோந்து செல்ல வேண்டியது அவசியம். கண்காணிப்பு கேமராக்கள், தெருவிளக்குகள் இல்லாதது, இதுபோன்ற சம்பவம் நடைபெற ஏதுவாக அமைந்திருக்கிறது. பாதுகாப்பில் கோட்டை விட்டது ஒருபுறம் இருந்தாலும், இனியும் இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேர உணவகங்கள், சாலையோர கடைகள், ஹோட்டல்கள், கிளப்புகளுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் எண்ணமே இனி யாருக்கும் வராத அளவுக்கு, காமக்கொடூரர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்கிற, எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு
சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் பள்ளி சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவனை கைது செய்த போலீசார், 'என்கவுன்டர்' செய்தனர். போலீசாரின் இந்நடவடிக்கையை கோவை மட்டுமின்றி, தமிழக மக்கள் வரவேற்றனர். அதுபோன்ற கடும் நடவடிக்கையை, தயவு தாட்சண்யம் பார்க்காமல் எடுத்தால் மட்டுமே ஆட்சியாளர்கள் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். காமக்கொடூரர்கள் மீண்டும்தலைதுாக்காமல் தடுக்க முடியும் என, சமூக பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.