இருசக்கர வாகன ஸ்டாண்ட் 19ம் தேதி மறுஏலம்
அன்னுார்; இருசக்கர வாகன ஸ்டாண்டுக்கான மறு ஏலம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.அன்னுார், வார சந்தையில், சுங்கம் வசூலிக்கும் உரிமை மற்றும் பஸ் ஸ்டாண்டில் உள்ள இருசக்கர வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.கடந்த 28ம் தேதியில் வார சந்தை ஏலம் உறுதி செய்யப்பட்டது. வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமை, ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.எனினும் மற்றொரு ஏலதாரர் கூடுதலாக 25 சதவீதம் கணக்கிட்டு, 2, 62,000 ரூபாய் செலுத்துவதாகவும், 11 மாத தொகையை பேரூராட்சியில் செலுத்தினார்.இதையடுத்து மறு ஏலம் நடைபெறும் என பேரூராட்சி அறிவித்தது. 'வரும் 19ம் தேதி காலை 11:00 மணிக்கு மறு ஏலம் நடைபெறும்,' என பேரூராட்சி தெரிவித்துள்ளது.