மது பாட்டில்களுடன் வீடியோ : சிக்கிய மூவர் சிறையிலடைப்பு
கோவை; பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பீர்பாட்டிலுடன் பைக்கில் சென்று சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட மூவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.இரு தினங்களுக்கு முன், கோவை 100 அடி ரோட்டில், இருந்து நவஇந்தியா செல்லும் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் மூவர், கையில் பீர்பாட்டில்களுடன் சென்றனர். வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச் சென்றதால், எதிரே வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இம்மூவரும் அவ்வழியாக வந்த, புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை, தகாத வார்த்தைகளால் திட்டி, பீர்பாட்டிலை காட்டி மிரட்டியுள்ளனர். அவரிடம் இருந்து ரூ.500ஐ பறித்து தப்பினர். இதுகுறித்து ராஜ்குமார், காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.மூவர் மீதும், பொது இடத்தில் ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள்(பி.என்.எஸ்., 296(பி), மிரட்டி பணம் பறித்தல்(பி.என்.எஸ்., 308 (4),மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துவதாக அச்சுறுத்துதல்(பி.என்.எஸ்., 351(3), உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்(281), மோட்டார் வாகனச் சட்டம், 128, 129, 177 ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சாபட்டு, சுசீந்குமார், 23, பேராவூரணியை சேர்ந்த ராஜ்குமார், 28, கோவை குரும்பபாளையம், கவுதம், 28, எனத் தெரிந்தது. மூவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மூவரும் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும், வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.