உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளாமரத்துார் குடிநீர் திட்டம்; மாவட்ட கலெக்டர் ஆய்வு

விளாமரத்துார் குடிநீர் திட்டம்; மாவட்ட கலெக்டர் ஆய்வு

மேட்டுப்பாளையம்; 'விளாமரத்தூர் குடிநீர் திட்ட பணிகளை துரிதமாக செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் படி,' மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமரத்தூரில் உள்ள, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு, அனுமதி வழங்கி, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில், விளாமரத்தூரில் பவானி ஆற்றில், நீர் உறிஞ்சும் கிணறும், அதன் அருகே, 20 மீட்டர் உயரத்தில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலைத் தொட்டியும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர் உறிஞ்சும் கிணற்றில் இருந்து பம்பிங் செய்யப்படும் தண்ணீர், மேல்நிலைத் தொட்டியில் நிரப்பப்படும். பின் தொட்டியில் இருந்து திறந்து விடும் தண்ணீர், மின் மோட்டார் பம்பிங் இல்லாமல், இயல்பாக குழாய் வழியாக சாமன்னா நீரேற்று நிலையத்திற்கு வரும்படி, திட்டம் போடப்பட்டுள்ளது. விளாமரத்தூரில் நடைபெற்று வரும், குடிநீர் திட்டப்பணிகளை, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், நேற்று ஆய்வு செய்தார். அவருடன் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், பொறியாளர் ராமசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகாரிகளிடம், பணிகளை துரிதமாக செய்து முடிக்கும் படியும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ