உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுக்கும் நெடுக்கும் அலையும் குதிரைகள்! நிம்மதியாக நடமாட முடியாமல் மக்கள் அச்சம்

குறுக்கும் நெடுக்கும் அலையும் குதிரைகள்! நிம்மதியாக நடமாட முடியாமல் மக்கள் அச்சம்

வேகத்தடை வேண்டும்

தொண்டாமுத்துார் ரோடு, குரியோ கார்டன் நுழைவு வாயில் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் அருகே, வேகமாக வரும் வாகனங்களால், அடிக்கடி விபத்து நடக்கிறது. உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.- முத்துக்குமார், குரியோ கார்டன்.

தடுமாறும் குழந்தைகள்

வடவள்ளி, டாட்டா நகர் மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் வீதியில், பாதாள சாக்கடை மூடி சாலையிலிருந்து இறங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட குழியில், குழந்தைகளின் கால்கள் மாட்டி தடுமாறி விழுகின்றனர். பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும்.- ஜெயந்தி, வடவள்ளி.

கடும் துர்நாற்றம்

நீலிக்கோணம்பாளையம், 59வது வார்டு, பழைய போஸ்ட் ஆபீஸ் எதிரில், சாக்கடை வாய்க்காலே தெரியாத அளவிற்கு செடிகள், கால்வாயை சுற்றிலும் வளர்ந்துள்ளது. கால்வாயிலும் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- சேகர், நீலிக்கோணம்பாளையம்.

தெருநாய் தொல்லை

ஆவாரம்பாளையம், பாலசுந்தரம் நகரில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு, இரவு முழுவதும் குரைக்கின்றன.- கவிதா, பாலசுந்தரம் நகர்.

சாலை முழுவதும் பள்ளங்கள்

சிட்ரா, ஜி.ஆர்.ஜி., நகர், சந்திரகாந்தி பள்ளி செல்லும் சாலை, மோசமாக சேதமடைந்துள்ளது. சாலை முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. தினமும், சின்னச்சின்ன விபத்துகள் நடக்கின்றன. உயிர்சேதம் நிகழும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்.- நிருபன், ஜி.ஆர்.ஜி., நகர்.

மண்ணாக மாறிய ரோடு

வெள்ளக்கிணறு, சமத்துவபுரம் செல்லும் சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. பல இடங்களில் தார் பெயர்ந்து, வெறும் மண்ணாக காட்சியளிக்கிறது. வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். பைக்கில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். - ராஜா, வெள்ளக்கிணறு.

மீண்டும் உடையும் குழாய்

பீளமேடு, தண்ணீர்பந்தல், 24வது வார்டு, நான்காவது தெரு, கணேஷ் நகரில், சூயஸ் குடிநீர் குழாய் பதிப்பு பணியின் போது, உப்பு தண்ணீர் குழாய் உடைந்தது. பலமுறை புகார் தெரிவித்த பின் சரிசெய்யப்பட்டது. இரண்டே நாட்களில் மீண்டும் உடைந்து, பெருமளவு தண்ணீர் வீணாகிறது.- -சேகர், பீளமேடு.

புகார் செய்தும் பலனில்லை

துடியலுார், சேரன் காலனி மற்றும் விஸ்வநாதபுரம் பகுதிகளில், உரிமையாளர்கள் குதிரை களை சாலையில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். சாலையில் அங்கும், இங்கும் நடமாடும் குதிரைகளால், வாகனஓட்டிகள் பாதிப்படைகின்றனர். - தங்கவேல், சேரன்காலனி.

சாலை அடைப்பு

கே.கே.புதுார், சாய்பாபாகாலனியில், சின்னம்மாள் வீதி விரிவாக்கத்தையும், மணியம் காளியப்ப வீதியையும் இணைக்கும், 50 அடி வழித்தடம் கடந்த நான்கு மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால், அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் ஒரு கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.- சுவாமிநாதன், கே.கே.புதுார்.

தடுப்புகளால் விபத்தை தடுக்கலாம்

ஜி.சி.டி.,யிலிருந்து, லாலி ரோடு செல்லும் வாகனங்கள், அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், இச்சாலையில் நாளுக்கு நாள் விபத்து அதிகரிக்கிறது. வாகனங்களின் வேகத்தைக் குறைக்க, கருப்பராயன் கோவில் அருகே தடுப்புகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.- சாய்ராம், ஆர்.எஸ்.புரம்.

குப்பை தேக்கம்

சவுரிபாளையம், உடையாம்பாளையம், ராம் கார்டன் வீதியில், குப்பை சரிவர அகற்றப்படுவதில்லை. ஜி.ஆர்.மருத்துவமனை பின்புறம் அதிக குப்பை தேங்கி கிடக்கிறது. - வெங்கடேசன், சவுரிபாளையம்.

வாகன ஓட்டிகளை துரத்தும் நாய்கள்

டி.வி.எஸ்.நகர், 16வது வார்டு, பாலாஜி நகரில், தெருநாய் தொல்லையால், சாலையில் நடக்கவே மக்கள் அஞ்சுகின்றனர். குழந்தைகள், முதியவர்களுக்கு நாய்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. பைக்கில் செல்வோரை துரத்தி, கீழே விழ வைக்கின்றன.- நாமநாதன், டி.வி.எஸ்.,நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி