| ADDED : ஜூன் 26, 2024 02:27 AM
நெய்வேலி நகரின் மையப்பகுதியில், என்.எல்.சி.,யின் முக்கிய கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற பல வீரர், வீராங்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளனர். நெய்வேலி வட்டம் 10ல் உள்ள இந்த மைதானம், பகலில், விளையாட்டு மைதானமாகவும், இரவில் குடி பிரியர்களின் 'பார்' ஆகவும் மாறிவிடுகிறது.நாள்தோறும் போதை ஆசாமிகள் இரவு 7:00 மணியில் இருந்து, இங்கு கூட்டம் கூட்டமாக அமர்ந்து, குடித்து கும்மாளம் அடிக்கின்றனர். போதை ஆசாமிகள் குடித்து விட்டு அட்டகாசம் செய்வதுடன் காலி மதுபாட்டில்கள் மற்றும் திண்பண்டங்களையும் அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். மேலும், மது பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு செல்வதால் மறுநாள் அந்த மைதானங்களில் விளையாட வரும் மாணவ, மாணவிகள் காலில் கண்ணாடி பாட்டில்கள் கிழித்து பாதிக்கப்படுகின்றனர்.அந்த பகுதியில் பெற்றோர்கள் பலமுறை அவர்களாகவே முன்வந்து சுத்தம் செய்து வைத்தாலும் கூட அன்று இரவே போதை ஆசாமிகள் மீண்டும் வழக்கம்போல ஆடுகளத்தை அவர்களது பார்களாக மாற்றி விடுகின்றனர். இதுகுறித்து புகார்கள் அளித்தும்கூட என்.எல்.சி., பாதுகாப்பு படையினரோ, போலீசாரோ நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விளையாட்டு மைதானத்தில் குடிபிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க, அதிரடி நடவடிக்கை தேவை.