| ADDED : ஆக 08, 2024 12:56 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விருத்தாசலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு கடந்த கல்வியாண்டில் படித்த பிளஸ் 2 மாணவி ஒருவரிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதை ஒரு மாணவர் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார்.தற்போது, அந்தப்படம் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை திரண்டு சென்று, பள்ளியில் இருந்து தப்பியோட முயன்ற தலைமை ஆசிரியரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையிலான போலீசார் சென்று, அவரை மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், மாணவிகள் சிலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும், வெளியே கூறினால் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என மிரட்டியதும் உறுதியானது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓராண்டுக்கு முன் இதே பள்ளியில் வேறொரு ஆசிரியர் ஒருவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.