சிதம்பரம் பக்தர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
சிதம்பரம் : கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த கனகராஜ் தலைமையில், கடந்த 1ம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷுக்கு, 30 பேர் கொண்ட குழு, ஆன்மிக சுற்றுலா சென்றனர். தரிசனம் முடிந்து திரும்பும்போது, மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ஒரு கிராமத்தில் சிக்கி கொண்டனர். அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பது குறித்த தகவல் அறிந்தார், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம்.அவரது உத்தரவின்படி, கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், உத்தரகண்ட் மாநில கலெக்டர் மற்றும் டில்லி அதிகாரிகளுடன் பேசி, பக்தர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார்.அதையடுத்து, புத்தி என்ற பகுதியில் நான்கு நாட்கள் சிக்கியிருந்த 30 பேரும், நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பித்தோர்கர் என்ற பகுதியில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், இரு வேன்கள் மூலம் டில்லிக்கு நேற்று காலை புறப்பட்டனர்.வழியில், ஒரு சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக, சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மாற்று சாலை வழியாக, இரவில் டில்லி வந்து சேர்ந்தனர். தமிழக அரசு ஏற்பாட்டில், அங்கிருந்து ரயில் மூலம் இன்று மாலை சென்னை புறப்படுகின்றனர்; நாளை மாலை சென்னை வந்து சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.