| ADDED : ஜூலை 01, 2024 06:50 AM
பெண்ணாடம்: கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பேரளையூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா, 25, இரு மகள்கள் உள்ளனர். 10 ஆண்டிற்கு முன் பன்னீர்செல்வம், சிவக்குமார் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். சிவரஞ்சனிக்கு திருமணமாகி விட்டது.சிவக்குமார் இறந்ததால் சற்று மனநலம் பாதித்த சிவசத்யா தனது தந்தை வழி பாட்டி தனலட்சுமியுடன் வசித்து வந்தார். சிவசத்யா, தனது பாட்டி தனலட்சுமியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார். கடந்த 28 ம் தேதி தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீட்டில் இருந்த மண் வெட்டியால் பாட்டி தனலட்சுமியை சரமாரியாக வெட்டிவிட்டு, அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விபரத்தை கூறினார்.அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி தனது உறவினர்களுடன் வந்து பார்த்தபோது தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, சிவசத்தியாவை நேற்று கைது செய்து விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அப்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிடுவதால் மன ரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளலாம் என, நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, சிவசத்யாவை மனநல சிகிச்சைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.