| ADDED : மார் 25, 2024 05:32 AM
நெய்வேலி: வேலுடையான்பட்டு கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 15ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 10நாட்களாக முருகப்பெருமான் ரிஷப வாகனம், மயில் வாகனம், முத்து ரதம், திருத்தேர் என ஒவ்வொருநாளும் வீதியுலா வந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார். உத்திர திருவிழாவின் முக்கிய உற்சவமான காவடி அபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, நெய்வேலி நகரம், நெய்வேலியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே பால் காவடி, மயில் காவடிகளை எடுத்து அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.என்.எல்.சி.,சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி மற்றும் அந்நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களும் குடும்பத்தினருடன் காவடி சுமந்து எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று ( 25ம் தேதி ) இரவு கோயிலின் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. நாளை நடக்க உள்ள விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது. மந்தாரக்குப்பம்: பங்குனி உத்திரத்தையொட்டி பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு பூஜைகள், அலங்காரம், மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடந்தன. நேற்று காலையில் ஏராமான பக்தர்கள் தங்களது கண்ணம் மற்றும் முதுகில் அலது குத்தி, பால் காவடி, பறவை காவடி, பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மந்தாரக்குப்பம் கடைவீதி முழுவதும் பல இடங்களில் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.