| ADDED : ஜூன் 13, 2024 12:21 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெண்ணாடம் - பெ.கொல்லத்தங்குறிச்சி செல்லும் சாலையோரம், பேரூராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. மழை நீர் மற்றும் வரத்து வாய்க்கால் மூலம் ஏரியில் நீர்ப்பிடிப்பு செய்யப்பட்டு, பெண்ணாடம், திருமலை அகரம், பெ.கொல்லத்தங்குறிச்சி கிராமங்களை சேர்ந்த 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏரி தூர் வாராததால் சம்பு, கோரை புற்கள் அதிகளவில் மண்டி, தூர்ந்தது. மழை காலங்களில் முழுஅளவு நீர்ப்பிடிப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் போர்வெல் பாசனத்திற்கு மாறினர். நாளடைவில், தண்ணீரின்றி பெரிய ஏரி வறண்டதால் அருகிலுள்ள விவசாயிகள் ஏரியை ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்ய துவங்கினர்.இதனால் 6 ஏக்கர் பரப்பில் இருந்த பெரிய ஏரி, அரை ஏக்கராக குறைந்தது. விவசாய பணி தடையின்றி தொடர ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வார வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே, பெண்ணாடம் பெரிய ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.