| ADDED : ஜூன் 26, 2024 02:27 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான திட்டக்குடி, தொழுதுார் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடக்கிறது. ரேஷன் அரிசியை விற்பது சட்ட விரோதம், யாரேனும் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரேஷன் அரிசி விற்பனை, கடத்தல் தொடர்பாக புகார்கள் வரும்போது, அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்கின்றனர்.அப்போது, ரேஷன் அரிசியை விற்கும் நபர்கள், 'எங்கள் கார்டுக்கு வாங்கின அரிசியை யாருக்கு வேண்டுமானாலும் விற்போம் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்வதறியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. குடிமைப்பொருள் கடத்தலை தடுக்க தனிப்பிரிவு இருப்பதால், உள்ளூர் போலீசாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதுபோன்ற காரணங்களால், இப்பகுதிகளில் ரேஷன் அரசி கடத்தலை தடுக்க முடியாத நிலை தொடர்கிறது.