| ADDED : மே 27, 2024 12:57 AM
நெய்வேலி : கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 36; தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய ஊடக ஒருங்கிணைப்பாளர். இவர், என்.எல்.சி., ஆர்ச்கேட் எதிரே நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த டவுன்ஷிப் போலீசார், ராஜ்குமாரை நிறுத்தி பைக் ஆவணங்கள் கேட்டனர். போதையில் இருந்த ராஜ்குமாரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார், ராஜ்குமார் மற்றும் அவரது பைக்கை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.காலையில், உரிய ஆவணங்களைக் காட்டி பைக்கை பெற்றுச் செல்லுமாறு ராஜ்குமாரை அனுப்பி வைத்துள்ளனர். வெளியே வந்த ராஜ்குமார், நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் கட்சியினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். ராஜ்குமார் சாவுக்கு, போலீசார் தான் காரணம் எனக்கூறி கோஷமிட்டனர். ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன், நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா ஆகியோர் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, உறவினர்கள் கலைந்தனர். விபத்து குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.