கடலுார் மாவட்டத்தில், நடராஜர் வீற்றிருக்கும், கோவில் நகரமான, 'சிதம்பரம்' மிக முக்கிய நகரமாக பார்க்கப்படுகிறது. நடராஜர் கோவில் மட்டுமின்றி, கல்வி கோவிலான அண்ணாமலை பல்கலைகழகம், மிக முக்கிய சுற்றுலா தளமான பிச்சாவரம் இங்குதான் உள்ளது.காவல் துறையை பொறுத்தவரை, சிதம்பரம் சரகம் 8 காவல் நிலையத்தை உள்ளடக்கியது. பெரும்பாலும் சிதம்பரம் சரகத்தில், ஏ.எஸ்.பி., நியமிக்கப்படுவர். ஒரு சில சமயங்களில் மட்டும் டி.எஸ்.பி., க்கள் பொறுப்பேற்பார்கள். கடலுார் மாவட்டத்தில் அதிக அளவு ஏ.எஸ்.பி., க்கள் சிதம்பரத்தில் பணியாற்றி உள்ளனர்.ஒரு சில பகுதிகளுக்கு, காவல் துறை அதிகாரிகள், டிரான்ஸ்பர் போடப்பட்டால், ஏண்டா அந்த ஊருக்கு மாற்றினார்கள் என வருத்தப்படும் அளவிற்கு சில ஊர்கள் இருக்கும்.ஆனால் சிதம்பரத்தை பொறுத்தவரை, அந்த ஊரில் பணியாற்ற வேண்டும் என கேட்டு வாங்கி சென்று பணியாற்றும் பகுதியாக சிதம்பரம் உள்ளது. குறிப்பாக டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என அதிகாரிகள் மத்தியில் சிதம்பரத்தை பிடிக்க எப்போதும் போட்டி இருக்கும்.தற்போது ஏ.எஸ்.பி.,யாக உள்ள ரகுபதி,பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில், இப்போதே சிதம்பரத்தை குறி வைத்து இரு டி.எஸ்.பி., க்கள் காய் நகர்த்த துவங்கியுள்ளனர். சேத்தியாத்தோப்பு உட்கோட்ட அதிகாரி வேளாண் அமைச்சர் மூலமாக சிதம்பரத்தை பிடிக்க கடும் போட்டியிடுகிறார். அதே சமயம் சீர்காழி உட்கோட்ட அதிகாரி ஒருவரும் மேலிடம் வரை சென்று சிதம்பரத்தை பிடிக்க காய் நகர்த்தி வருகிறார்.இரு டி.எஸ்.பி., க்கள் சிதம்பரத்தை பிடிக்க பிரயத்தனம் செய்து வரும் நிலையில், யாருக்கு சிதம்பரம் என்ற போட்டி நிலவி வருகிறது. சிதம்பரம் யாருக்கு என்பது சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது. முடிவை தெரிந்துகொள்ள காவல் துறையினரும் ஆவலோடு எதிர்பார்த்து கார்த்திருக்கினர்.