அடுத்தடுத்த இரு வீடுகளில் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை; ரெட்டிச்சாவடியில் துணிகரம்
கடலுார் : கடலுார் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் ரூ. 5 லட்சம் மதிப்பு நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் ரெட்டிச்சாவடி அடுத்த உடலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்,60; இவரது மனைவி சரசு,58: இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கினர். நேற்று காலை வீட்டின் பின்பக்க கதவு உடைக்கும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்ட சரசு அங்கு சென்று பார்த்தார். அப்போது, திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயினை பறித்தனர். சத்தம் கேட்டு தடுக்க வந்த சம்பத்தை இரும்பு ராடால் தாக்கி விட்டு தப்பினர்.அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி மனைவி கலைச்செல்வி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 கிராம் தங்க காசை திருடிச் சென்றனர். அருகில் உள்ள முருகன் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரவே மர்ம நபர்கள் தப்பினர்.தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.