| ADDED : பிப் 11, 2024 03:18 AM
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருந்தவர்களுக்கு, பேரூராட்சி சார்பில், மாற்று இடம் வழங்கப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்.நகர் மலைமேடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் இந்த பள்ளி துவங்கப்பட்டபோது அருகில் குடியிருந்த நபர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சிலர் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து குடியிருந்து வந்தனர்.இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் ஆகியோர் குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் செல்வமணி என்ற நபர் பேரூராட்சி சார்பில் ஒதுக்கி தரப்படும் இடத்தில் குடிபெயர்வதாக ஒப்புக்கொண்டார்.அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர் மண்டல துணை தாசில்தார் சிவகண்டன், மற்றும் வருவாய்த்துறையினர் இடம் பெயர விரும்புவோருக்கு பள்ளிக்கு அருகிலேயே மாற்று இடம் தேர்வு செய்து வழங்கினர்.