மகப்பேறு பிரிவுக்கு தனி மருத்துவமனை கட்டடம் விருத்தாசலத்தில் ஏற்பாடுகள் ஜரூர்
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மகப்பேறு, முட நீக்கியல், குழந்தைகள் நலன், பொது ஆகிய பிரிவுகளில் 200க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இட நெருக்கடி காரணமாக உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 5 கோடி ரூபாயில் ஐந்து அடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், விருத்தாசலத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை, அரசு கல்லுாரியாக அறிவித்ததுடன், தற்போது 194 கூடுதல் மருத்துவப் பணியிடங்களையும் தமிழக அரசு நிரப்பி வருகிறது.இதனால், மகப்பேறு பிரிவுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டடம் கட்டும் வகையில் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையிலான அதிகாரிகள் இடம் தேடி வந்தனர். அப்போது, தில்லை நகரில், அமைச்சர் கணேசன் வீட்டின் பின்புறம் உள்ள காலி மனையை தனிநபர் ஆக்கிரமித்து வைத்திருப்பது தெரிய வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் அதனை மீட்ட நகராட்சி அதிகாரிகள், பென்சிங் அமைத்தனர்.வரும் 22ம் தேதி கடலுாருக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், நலத்திட்டங்கள் அறிவிக்கும்போது, இந்த இடத்தில் மகப்பேறு மருத்துவமனைக்கு தனியாக கட்டடம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடலாம் என, கூறப்படுகிறது. அதை உறுதிபடுத்தும் வகையில், ஏற்பாடகள் ஜரூராக தயாராகி வருகிறது.அமைச்சர் கணேசன் ஒப்புதலின்படி, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடிதம் கொடுத்து, முதல்வர் விழாவிற்கு ஆயத்தமாகி வருகிறது. மகப்பேறு மருத்துவமனைக்கு தனி கட்டடம் வரும்போது அதிநவீன உபகரணங்களும் கிடைக்கும் என்பதால் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.