மாநில அளவிலான வில் வித்தை போட்டி புவனகிரி மாணவருக்கு வெண்கலப் பதக்கம்
புவனகிரி : கரூர் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் புவனகிரி மாணவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். புவனகிரி சேர்ந்த சக்திவேல்--நிர்மலா தம்பதியரின் மகன் கீதன்,13; இவர் அரியலுார் மாவட்டம் ஆலத்தியூர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் எஸ்.கே. வாரியர்ஸ் விளையாட்டு அகடமியில் மாஸ்டர் கார்த்தியிடம் வில்வித்தை உள்ளிட்ட சாகச பயிற்சி பெற்று வருகின்றார். சமீபத்தில் கரூர் ஸ்டார் கல்விகுழும வளாகத்தில், மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் கீதன் பங்கேற்று மாநில அளவில் மூன்றாமிடத்திலும், அரியலுார், கடலுார் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று வெண்கல பதக்கம் மற்றும் பாராட்டு சான்றும் பெற்றார். இதற்கான பரிசளிப்பு விழாவில் ஸ்டார் கல்விக் குழும தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஸ்டார் கல்விக்குழும செயலாளர் நிதின், நிர்வாகி சத்யா முன்னிலையில், கரூர் மாவட்ட வில்வித்தை பயிற்சி அமைப்பின் தலைவர் வாழவந்தியார், செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோ ர் விருந்தினராக பங்கேற்று வழங்கினர். பரிசு பெற்ற மாணவர் கீதனை எழுத்தாளர் ஜெயபாலன், பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.