சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டமும், நாளை மறுதினம் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் பஞ்சமூர்த்தி வீதியுலா, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நாளை முக்கிய விழாவான தேரோட்டமும், மறுநாள் 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.தேர் விழாவையொட்டி இன்று கருவரையில் வீற்றிருக்கும் நடராஜர் - சிவகாமசுந்தரியுடன் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து நாளை தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்து நான்கு வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.மறுநாள் 13ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, சிவகாமசுந்தரியும் - நடராஜரும் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி தரும், ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. 14ம் தேதி முத்துப்பல்லக்கு, 15ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.