கடலுாரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சென்னை நபர் கைது
கடலுார்; கடலுாரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சென்னை நபரை போலீ சார் கைது செய்தனர். கடலுார் ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி ஆதிலட்சுமி, 67; கடந்த 31ம் தேதி, வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். ஆதிலட்சுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது, அவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்தார். ஆதிலட்சுமி செயினை இறுக்கி பிடித்ததால், பாதி செயினை அறுத்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ரெட்டிச்சாவடி போலீசார், புதுக்கடை புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர், சென்னை ஆலந்துாரை சேர்ந்த முனிர்பாஷா மகன் குலாப் பாஷா, 42; என்பதும், பெரிய காட்டுப்பாளையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் எனவும் தெரியவந்தது. மேலும், கடந்த 20ம் தேதி, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்பிளண்டர் பைக்கை திருடிக்கொண்டு, கடலுார், புதுப்பாளையத்தில் 65 வயது மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37 கிராம் நகை மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.