சிதம்பரம் ஞானப்பிரகாசம் குள நீராழி மண்டபத்திற்கு சம்ப்ரோஷ்ணம்
சிதம்பரம்: 30 ஆண்டுகளுக்கு பின்பு, நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ள, சிதம்பரம் ஞானபிகாச குளத்தில் அமைக்கப்பட்ட நீராழி மண்டபத்திற்கு சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது.சிதம்பரம் நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசம் குளம் சிதம்பரம் நகராட்சி சார்பில் ரூபாய் 3 கோடி செலவில் சமீபத்தில், புனரமைக்கப்பட்டது. இதனால் ஞானப்பிரகாசம் குளத்தில் சுமார் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்ப உற்சவம் வரும் ஜனவரி 14 ம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு ஞானபிரகாசம் குளத்தில் சென்னையைச் சேர்ந்த நடராஜன் குடும்பத்தினர் சார்பில், கருங்கல் திருப்பணி செய்து, கட்டப்பட்ட நீராழி மண்டபத்திற்கு நேற்று முன்தினம், காலை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களால் சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது.முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கலச பிரதிஷ்டை, விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், சிதம்பரம் நகர் மன்றத்தலைவர் செந்தில்குமார், சிதம்பரம் நீர்நிலைகள் பாதுகாப்பு குழுத் தலைவர் செங்குட்டுவன உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.