| ADDED : செப் 26, 2011 10:30 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகரமன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., வேட்பாளர் கள் மனு தாக்கல் செய்தனர். நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் சுதாகர் நேற்று மதியம் அமைச்சர் சம்பத் முன்னிலையில் தேர்தல் அலுவலர் குருசாமியிடம் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்லலாம் என தேர்தல் விதி உள்ளது. நகராட்சி அலுவலகம் வெளியிலேயே வாகனங்களை போலீசார் நிறுத்தி ஒவ்வொரு வேட்பாளருடன் நான்கு பேரை மட்டும் அனுப்பினர். அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் மனு தாக்கலுக்கு வந்த அமைச்சர் சம்பத் தேர்தல் விதியை மதித்து தனது காரை வெளியிலேயே நிறுத்தி விட்டு இறங்கி நடந்து சென்றார். மனு தாக்கல் செய்ய நால்வர் மட்டுமே வர வேண்டுமென அமைச்சர் சம்பத் கூறியதால் நான்கு பேர் மட்டுமே உள்ளே சென்றனர்.
மனு தாக்கலுக்குப் பின்னர் அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி பதவிகள் அனைத்தையும் அ.தி.மு.க., வெற்றி பெறும் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பஸ் நிலையம், குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, சுகாதார வளாகம் என பல பணிகள் நடந்தது. தி.மு.க., ஆட்சியில் அத்திட்டங்கள் செயல்படாமல் முடங்கின. செயல்படாத அத்திட்டங்கள் செயல்படவும் கூடுதல் திட்டங்கள் வரவும் மக்கள் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். மாநிலத்திலேயே முதன்மை நகராட்சியாக உயர்த்த பாடுபடுவோம். இவ்வாறு அமைச்சர் சம்பத் கூறினார். தி.மு.க.,: நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். ம.தி.மு.க.,: நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., சார்பில் போட்டியிடும் பாலன் மாவட்ட பொருளாளர் வேலு முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.