உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரிகள் அலட்சியத்தால் அறுவடை பாதிப்பு விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

அதிகாரிகள் அலட்சியத்தால் அறுவடை பாதிப்பு விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

கடலூர் : கடலூர் அருகே தேங்கியுள்ள மழை நீரை வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விளைந்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். கடலூர் அருகே உள்ள பெண்ணையாற்றின் கிளையாக பிரிந்து செல்வது உப்பனாறு. இது புதுச்சேரி மாநிலம் பாகூர், முள்ளோடை பகுதியின் வடிகாலாகவும் அமைந்துள்ளது. கடலூர் - புதுச்சேரி மாநில எல்லையில் பெய்யும் மழை நீர் உப்பானாற்றில் சென்று கலக்கிறது. கடந்த சில வாரங்களாக தினம் தினம் பெய்து வரும் மழையால் உப்பனாற்றில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்கி நிற்கிறது. இந்த உபரி தண்ணீர் வழக்கமாக குண்டு உப்பலவாடி தரைப் பாலத்தின் வழியாக சென்று கடலில் கலக்க வேண்டும். ஆனால் குண்டுஉப்பலவாடி ஆற்றில் மேம்பாலம் கட்டுமானப் பணிக்காக ஆற்றின் குறுக்கே அணைபோட்டு தண்ணீரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் தண்ணீர் வடிய வழியின்றி பெண்ணையாறு, உப்பனாற்றில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து வயல்பரப்பில் பாய்ந்து வருகிறது.

இதனால் ஆற்றுப் படுகையில் உள்ள கிராமங்கள் சுள்ளியாங்குப்பம், மூர்த்திக்குப்பம், முள்ளோடு, உச்சிமேடு, சுபஉப்பலவாடி, நாணமேடு உள்ளிட்ட கிராமங்கள் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமலும், சம்பா நெல் நடவு செய்ய நிலத்தை தயார் செய்ய முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர், டி.ஆர்.ஓ., தாசில்தார் ஆகியோர்களுக்கு மனு செய்தனர். டி.ஆர்.ஓ., மற்றும் தாசில்தார் முயற்சியால் ஒப்பந்தக்காரர் கண் துடைப்புக்காக சிறிய அளவில் தண்ணீரை திறந்து விட்டனர். வேளாண் அதிகாரிகள் அலட்சியத்தாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்தக்காரருக்கு இணக்கமாக செல்வதாலும் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட சுபஉப்பலவாடி விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பதென முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை