| ADDED : ஆக 28, 2011 11:07 PM
கடலூர் : கடலூரில் தே.மு.தி.க., மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் கணக்கு கேட்டதால் நிர்வாகிகளுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கடலூர் பாரதி சாலையில் ஏ.வி.பி. வளாகத்தில் தே.மு.தி.க., மாவட்ட அலுவலகம் கீற்றுக் கொட்டகையில் இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. அதனையொட்டி புதிதாக கான்கிரீட் அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளரான பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி உரிமையாளர் ராமச்சந்திரன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். விழாவிற்கு வந்த கடலூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ராயல், நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.,விடம் கட்சி தலைமை எவரிடமும் நிதி வசூலிக்கக் கூடாது எனக் கூறியுள்ளது. கட்சி அலுவலகம் கட்டுவது குறித்து நிர்வாகிகளிடம் கூறியிருந்தால் அனைவரும் தொண்டர்களிடம் வசூலித்து கட்டியிருக்கலாம். ஆனால், நீங்கள் சிலரை மட்டும் கூட்டு சேர்த்துக் கொண்டு கம்பெனிகள் மற்றும் மாற்றுக் கட்சியினரிடமும் பணம் வசூலித்து அலுவலகம் கட்டியுள்ளீர்கள். திறப்பு விழா அழைப்பிதழில் நிர்வாகிகள் பெயர் இல்லை. இதற்கு விளக்கம் தர வேண்டும். கட்சி அலுவலகம் கட்டியது குறித்த வரவு - செலவு கணக்கு நிர்வாகிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., 'உங்களிடம் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை' எனக் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாவட்டச் செயலரின் ஆதரவாளர்களான விஜயகாந்த் மன்ற மாவட்டச் செயலர் வைத்தியநாதன், கடலூர் நகர செயலாளர் தட்சணா உள்ளிட்டோர் கணக்கு கேட்ட நிர்வாகிகளைத் தாக்க முயன்றனர். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. உடன் மற்ற நிர்வாகிகள். மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து மற்றும் முக்கிய நிர்வாகிகளை அவசர, அவசரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதுகுறித்து மாவட்டச் செயலாளரின் அதிருப்தியாளர்கள் கூறுகையில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளர் குறித்து கட்சி தலைமையில் முறையிடப் போவதாக தெரிவித்தனர்.