கோடை உழவு செய்த விவசாயிகளுக்கு மானியம் உதவி வேளாண் இயக்குனர் அழைப்பு
விருத்தாசலம்: மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்த விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: விருத்தாசலம் வட்டாரத்தில் 2025-26ம் ஆண்டு தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.கோடை உழவு செய்வதினால், மழைநீர் வீணாகாமல், வயலில் நீர் உறிஞ்சப்படுகிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிர்களை தாக்கக்கூடிய பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகிறது. கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு ரூ.800 வீதம் 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற, விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்யலாம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு, தங்களது நில ஆவணம் சிட்டா நகல், உழவு பணி மேற்கொண்ட டிராக்டர் பில், கோடை உழவு செய்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஆகிய ஆவணங்களை இணைத்து, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது விருத்தாசலம் வட்டார வேளாண் துறை அலுவலகத்தில் சமர்பித்து விவசாயிகள் பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.