| ADDED : ஜன 18, 2024 04:33 AM
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வம் மற்றும் உடற் தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு, ஆண்டுதோறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வரும் 19ம் தேதி முதல் 31 வரையில் நடத்தப்படுகிறது.இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடலுார் சில்வர் பீச்சில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அங்கு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள், கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.