உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் கலெக்டர் ஆபீசில் இன்று ஏற்பாடு
கடலுார்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக 'மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்' இன்று நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கடலுார் மாவட்டம் கிராமப் புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர். இம்மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 'உயர்வுக்குப்படி - உயர்கல்வி வழிகாட்டி குழு' அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'கட்டுப்பாட்டு அறை'யில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, 'கல்லுாரிக் கனவு' மற்றும் 'உயர்வுக்குப்படி' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக 'மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்' கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (27ம் தேதி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது.முகாமில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகள், பட்டியல், பழங்குடியின வகுப்பினர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள், உயர்கல்வியைத் தொடருவதற்கான உதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.