அதிகரிக்கும் கொசுத்தொல்லை உறக்கத்தை தொலைக்கும் மக்கள்
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடலுார் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத்திட்டம் கொண்டு வந்தால் கொசுக்கள் உற்பத்தி தடுக்கப்பட்டு கொசு இல்லா மாநகரமாக திகழும் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்போது மாநகரத்தில் அதிகளவில் கொசுக்களின் உற்பத்தி பெருகி உள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில், மாலை 6:00 மணியாகிவிட்டால் மக்கள் வெளியே பொதுவெளியில் நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது. பஸ் நிலையம், பூங்காக்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில், கொசுக்களால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வீடுகளில் கொசுத்தொல்லையால் நிம்மதியாக துாங்க முடியவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடலுார் மாநகராட்சியில் கொசுக்களால் நோய் அபாயம் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும், முற்றிலும் ஒழிக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.