உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு

புவனகிரி: கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.கீழ்புவனகிரி கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் கந்தன் வரவேற்றார். எஸ்.பி., ராஜாராமன், சப் கலெக்டர் ராக்ஷிராணி, மாவட்ட இணை பதிவாளர் திலீப்குமார், துணைப்பதிவாளர்கள் ரங்கநாதன், இம்தியாஸ் முன்னிலை வகித்தனர். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும், பணியை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், கடலுார் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் என, 7 லட்சத்து 74 ஆயிரத்து 578 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 1,109 ரூபாய் செலவில் மொத்தம் 85 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகளை கண்காணிக்க 97 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் சபாநாயகம், தலைமை செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தொடக்க வேளாண் கடன் சங்க செயலர் நடராஜன் ஏற்பாட்டில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு 19 லட்சத்து 35 ஆயிரம் செலவிலும், தனி நபருக்கு 2 லட்சம் கடனுதவி காசோலை வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் வேலுசாமி நன்றி கூறினார்.பின்னர், கீரப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் 20 கோடியே 80 ஆயிரம் மதிப்பீட்டில், சாலை விரிவுபடுத்தும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ