மர்மமான முறையில் இறந்து கிடந்த தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு பதிய பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கடலுார்: தி.மு.க., நிர்வாகி மர்மமான முறையில் இறந்துகிடந்ததை கொலை வழக்காக பதிவு செய்து, விசாரிக்கக்கோரி பா.ம.க.,வினர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நடுவீரப்பட்டு அடுத்த என்.மூலக்குப்பத்தை சேர்ந்தவர் ஞானகுமார், 53; விவசாயி. தி.மு.க., கிளை கழக செயலாளரான இவர் கடந்த 25ம் தேதி இரவு தனது மோட்டார் கொட்டகைக்கு துாங்க சென்றார். இதையடுத்து, நேற்று முன்தினம் காலை சமட்டிக்குப்பத்தில் ஞானகுமார் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் சந்தேகம் மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை பா.ம.க., மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் ஞானகுமார் உறவினர்கள் கடலுார் அரசு மருத்துவமனை எதிரே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், சபியுல்லா மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஞானகுமார் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தேகம் மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். அதற்கு போலீசார், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.