உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் பஸ், கார், லாரி அடுத்தடுத்து மோதி தாய், மகள் பரிதாப பலி; 26 பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே அதிகாலையில் சோகம்

தனியார் பஸ், கார், லாரி அடுத்தடுத்து மோதி தாய், மகள் பரிதாப பலி; 26 பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே அதிகாலையில் சோகம்

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே லாரி, கார், பஸ் என அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் காரில் சென்ற தாய், மகள் இறந்தனர். பஸ் பயணிகள் உட்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த ஒடுவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா, 50; இவரது மனைவி ஜெயா,40; மகள்கள் வசந்தி,18; வைதேகி, 13. இவர்கள், நேற்று இரவு சென்னை நோக்கி 'டொயோட்டா குவாலிஸ்' காரில் சென்றனர். காரை, அழகுராஜா ஓட்டினார்.நேற்று அதிகாலை 3:30 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஆசனுார், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னே சென்ற சரக்கு லாரி திடீரென பிரேக் போட்டதால், அழகுராஜாவும் பிரேக் போட்டுள்ளார்.இதனால், பின்னால் அதிவேகமாக வந்த தனியார் சொகுசு பஸ் கார் மீது மோதியது. இதில் நிலை குலைந்த கார், முன்னால் நின்ற சரக்கு லாரி மற்றும் சென்டர் மீடியனில் மோதி நொறுங்கியது. இதில், காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி, ஜெயா, வசந்தி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அழகுராஜா, வைதேகி படுகாயம் அடைந்தனர்.பஸ்சில் பயணம் செய்த, 50 பேரில் சென்னை, வியாசர்பாடி சந்திரசேகர் மனைவி ராஜேஸ்வரி, 54; செம்பரம்பாக்கம் தன்ராஜ், 52; வரதராஜ். 70; மோகன், 72; காஞ்சிபுரம் சுரேஷ், 40; உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.எடைக்கல் போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜெயா, வசந்தி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவ்விபத்து காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து நீண்ட துாரம் வாகனங்கள் நின்ற நிலையில், எறஞ்சி அருகே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற குவாலிஸ் கார், அரசு விரைவு பஸ், வேன் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விபத்துக்கு காரணம்

ஆசனுாரில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை குறுகலாகிப் போனது. இதனால் அப்பகுதியில் தினமும், குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறுகலான சாலையில் நேற்று அதிகாலை வேகமாக சென்ற லாரி திடீர் பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ