பள்ளி மாணவி பலாத்கார வழக்கு புதுச்சேரி தொழிலாளிக்கு ஆயுள்
கடலுார்: பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு கடலுார் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.புதுச்சேரி மாநிலம், சங்கரன்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 42; கொத்தனார். இவருக்கு, கடலுார் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியுடன் கடந்த 2021ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அதே ஆண்டு ஜூன் மாதம், திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து, கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் வழக்கு தொடந்தனர். அரசு தரப்பில் ஜோதிரத்தினம் ஆஜரானார்.வழக்கு விசாரணை நேற்று முடிந்தது. நீதிபதி லட்சுமி ரமேஷ், இவ்வழக்கில் தொடர்புடைய செல்வத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.